கூகுள் பே-வில் அறிமுகமான பாக்கெட்மணி:இந்த புதிய வசதி எவ்வாறு செயல்படும், அதன் பயன்கள் என்னென்ன?
டிஜிட்டல் பணப்பரிமாற்றத்துக்கான முன்னணி செயலியாக இருக்கும் கூகுள் பே, பிள்ளைகளுக்கு வழங்கப்படும் பாக்கெட் மணியை சரியாகத்தான் செலவிடுகிறார்களா என்பதை பெற்றோர் கண்காணிக்கக் கொண்டு வந்திருப்பதுதான் பாக்கெட் மணி என்ற வசதி.
ஜிபே-வின் இந்த புதிய வசதி எவ்வாறு செயல்படும், அதன் பயன்கள் என்னென்ன, பெற்றோர் இதனை எவ்வாறு சிறப்பாக கையாளலாம் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகும் முன்பே, இது பற்றி பல புரளிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவிட்டன.
கூகுள் பே-வானது யுபிஐ சர்க்கிள் அமைப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த வசதி, பெற்றோர்கள் தனி வங்கிக் கணக்கு தொடங்காமலேயே, தங்கள் பிள்ளைகளுக்கோ அல்லது தங்களை சார்ந்திருப்பவர்களுக்கோ நேரடியாகப் பணம் அனுப்பவும், அதே நேரத்தில் அந்தப் பணம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை கண்காணிக்கவும் வழி வகை செய்கிறது.
பாக்கெட் மணி என்ற வசதியானது, ஒரு முக்கிய பயனர், தன்னுடைய இரண்டாவது பயனரை, வங்கியிலிருந்து பணப்பரிமாற்றம் செய்ய அனுமதிப்பது. அதாவது, பெற்றோர், தங்களது பிள்ளைகள் செய்யும் சின்ன சின்ன செலவுகளை ஜிபே மூலம் செலவிட அனுமதிப்பது, ஆனால், அந்த செலவிடும் தொகை நேரடியாக பெற்றோரின் வங்கிக் கணக்கிலிருந்துதான் கழிக்கப்படும்.
இதன் மூலம், பெற்றோரின் பணத்தை பிள்ளைகள் செலவு செய்ய வசதி ஏற்படுவதுடன், அதனை முழுமையாகக் கண்காணிக்கும் வாய்ப்பு பெற்றோருக்குக் கிடைக்கிறது.
எவ்வாறு செயல்படும்? ஜிபேயுடன் இணைக்கப்பட்ட, செயல்பாட்டில் உள்ள ஒரு வங்கிக் கணக்கை பெற்றோர் பயன்படுத்த வேண்டும். அவர்கள், ஐந்து பேர் வரை இந்த ஜிபி- வசதியில் இணைத்துக் கொள்ளலாம். வாழ்க்கைத் துணை, பிள்ளைகள், குடும்ப உறுப்பினர்கள் என யாரை வேண்டுமானாலும் அதிகபட்சமாக ஐந்து பேரை இரண்டாம் தர பயனராக இணைத்துக் கொள்ளலாம்.
அவர்களும், தங்களது செல்போனில் ஜிபே செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். சொந்தமாக வங்கிக் கணக்கு இருக்க வேண்டியது அவசியமில்லை.
ஆனால், இனி இரண்டாம் தர பயனர்களும் ஜிபே மூலம் பணப்பரிமாற்றத்தை மேற்கொள்ளலாம். இந்த பணம், பெற்றோரின் வங்கிக் கணக்கிலிருந்து கழிக்கப்படும். ஆனால், பிள்ளைகள் எதற்கெல்லாம் செலவிட்டார்கள் என்பதை பெற்றோர் தெரிந்து கொள்ளலாம்.
பெற்றோரிடம் முழு கட்டுப்பாடும் இருக்கும் - பெற்றோருக்கு பல வாய்ப்புகளை இந்த பாக்கெட்மணி வழங்குகிறது. முதல் இரண்டு ஆப்ஷன்கள் என்னவென்றால், ஒரு குறிப்பிட்டத் தொகையை மாதந்தோறும் செலவிட்டுக் கொள்ளலாம் என உச்ச வரம்பை நிர்ணயித்து விடுவது. இதன் மூலம், பிள்ளைகள் ஒவ்வொரு முறையும் பெற்றோரிடம் அனுமதி கோர வேண்டியதில்லை. 5 ஆயிரத்தை பெற்றோர் நிர்ணயித்திருந்தால் 5 ஆயிரம் வரை பிள்ளைகள் செலவிட்டுக் கொள்ளலாம்.
இரண்டாவது ஆப்ஷன், ஒவ்வொரு பணப்பரிவர்த்தனையும் பெற்றோரின் அனுமதியைப் பெற்றாக வேண்டும். இதன் மூலம் பிள்ளைகள் ஒரு தொகையை செலவிடுவதற்கு, ஒவ்வொரு முறையும் பெற்றோர் கூகுள் பே மூலம் அனுமதி வழங்க வேண்டும். சிறு பிள்ளைகள் இருக்கும் பெற்றோர் இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும், இந்த பயனரை இணைக்க, யாருக்கு இரண்டாம் தர பயனர் அனுமதி வழங்கப்படுகிறதோ, அவரது அடையாள அட்டை உள்ளிட்டவற்றை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம்.
ஜிபேயில் இந்த வசதயை பயன்படுத்துவது எப்படி? பாக்கெட் மணியை ஆப்ஷன் பயன்படுத்த எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பயனர்கள் ஜிபேவில் உள்ள தங்கள் சுயவிவர (புரொஃபைல்) பகுதிக்குச் சென்று, யுபிஐ சர்க்கிள்-ஐத் தேர்ந்தெடுத்து, செட்-அப் தொடங்க வேண்டும்.
அதில் சென்று பிள்ளையின் தொடர்பு எண்ணைத் தேர்ந்தெடுத்து, அவர்களின் யுபிஐ சர்க்கிள் க்யூஆர் (UPI Circle QR) குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும்.
அதில், ஒப்புதல் அளிக்கும் வாய்ப்பைத் தேர்ந்தெடுத்த பிறகு, பெற்றோர் அதிகபட்ச தொகையை நிர்ணயித்து பிள்ளைகள் எண்ணுக்கு இந்த வாய்ப்பைப் பயன்படுத்த அழைப்பு விடுக்க வேண்டும்.
இந்த அழைப்பை, பிள்ளை ஏற்றுக் கொண்டதும் பாக்கெட் மணி ஆப்ஷன் ஆக்டிவ் ஆகிவிடும்.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை வாய்ப்புகள் அதிகரித்துவிட்ட நிலையில், பிள்ளைகளும் அதனைப் பயன்படுத்த வேண்டும். ஆனால், பெற்றோரின் நேரடிக் கண்காணிப்பில் அதனை செயல்படுத்தும் வகையில் கூகுள் பே இதனை மேற்கொண்டுள்ளது.

No comments:
Post a Comment