மஹா சிவராத்திரியின் தெய்வீக மகிமைகள்
மகா சிவராத்திரி என்பது மிக அற்புதமான தெய்வீக இரவாகும். அனைத்து ஜீவராசிகளும் ஈசனை வழிபட்டு, அவரது அருள் பெறும் உன்னதமான இரவாக மகா சிவராத்திரி திருநாள் கருதப்படுகிறது. மகா சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் அந்த நாளில் சிறப்புகள், இது எத்தனை மகத்துவம் வாய்ந்த, உயர்ந்த பலன்களை தரக் கூடிய இரவு என்பதை தெரிந்து கொண்டு விரதம் இருப்பது சிறப்பானதாக இருக்கும். மகா சிவராத்திரியின் மகிமை எப்படிப்பட்ட என வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்.
ராத்திரி எனப் பெயரோடு அழைக்கப்படும் விரதங்களில் சிவனை துதித்து வணங்கப்படும் விரதமே சிவராத்திரியாகும். விஷ்ணுவுக்காகக் கொண்டாடப்படுவது வைகுண்ட ஏகாதசி விரதம். சிவனுக்காக கொண்டாடப்படுவது மகா சிவராத்திரி. மாதந்தோறும் தேய்பிறையில் வரக் கூடிய சதுர்த்தசி திதியை சிவராத்திரி என குறிப்பிடுகிறோம். சிவராத்திரி நித்ய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மகா சிவராத்திரி, யோக சிவராத்திரி என்றெல்லாம் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
சிவராத்திரிகள் பல இருந்தாலும் மாசி மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் வரும் புண்ணிய தினமே மகா சிவராத்திரி ஆகும். இந்துக்களின் முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானை எண்ணி முழு நாளும் வழிபடும் சிறப்பான விரதம் இந்த சிவராத்திரி ஆகும். அலை பாய்ந்து அவதிப்படும் மனிதனது ஐம்புலன்களும் ஓரிடத்தில் ஒடுங்கி பரமாத்மாவாகிய பரம்பொருளிடம் ஒடுங்கும் இந்த `ராத்திரி' மங்கலமான ஒளி சிந்தும் ராத்திரியாகும். நமது ஐம்புலன்களையும் அடக்கி இறைவனது சிந்தனையோடு இறையன்பில் மூழ்கியிருக்கும் போது இந்த உலகின் இடையூறுகள் நம்மை எதுவும் செய்வதில்லை. உலகினில் உள்ள எல்லா பொருட்களுமே மாயையிடம் ஒடுங்கும்.அப்படி மகா சக்தியிடம் ஒடுங்கும் காலம் இருள் நிறைந்ததாக இருக்கும்.
இந்த காலம் மகா பிரளயம் என்று சொல்லப் படுகின்றது. உலகம் எத்தனை காலம் இருக்கின்றதோ அத்தனை காலமும் பிரளயமும் உண்டு. இந்த காலத்தில் தான் உமாதேவி நான்கு காலமும் சிவனைப் பூஜித்தார்.முழு முதற் கடவுளான சிவபெருமான் மனமிறங்கி, உமா தேவியை நோக்கி உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு அம்மையார், நான் தங்களை மனமுவந்து பூஜித்த இந்த நாள் சிவராத்திரி எனப் பெயர் பெற வேண்டும். இந்த தினத்தில் உங்களை முழு மனதோடும் பயபக்தியோடும் பூஜிப்பவர்கள் தங்கள் அருளினால் சகல பாக்கியங்களையும் பெற வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். இறைவனும் அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்டார்.
அதனால் தான் சிவராத்திரி சிவ பூஜைக்கு சிறந்த நாளாகக் கருதப்படுகிறது. சிவராத்திரி பற்றி பல கதைகள் மூலமாகவும் சிவராத்திரி மகிமை கூறப்படுகின்றது. ஸ்கந்த புராணத்தில் கூறப்பட்டிருக்கும் ஒரு கதை மகா சிவராத்திரி இரவு மற்றும் மகா சிவராத்திரி விரதத்தின் மகிமைகளை உணர்த்தும் பிரபலமானதாக சொல்லப்படுகிறது.
குருத்ரோகி என்னும் வேடன் பகல் முழுவதும் காடு முழுவதும் அலைந்தும் இரை ஏதும் கிடைக்காமல் இருந்தான். இதனால் உணவு ஏதும் சாப்பிடாமல் இருந்த அவன், இரவில் வேட்டையாடுவதற்காக ஓர் நதியை கடந்து அக்கரைக்கு சென்றான். தரையில் தன் வலையை விரித்து வைத்துக் கொண்டே இரவு முழுவதும் கண் விழித்துக் கொண்டிருந்த வேடன் பொழுது போக்காக தான் அமர்ந்திருந்த வில்வ மரத்தின் இலைகளை உருவி உருவி கீழே வீசிக் கொண்டிருந்தான். அந்த வில்வ இலைகள் மரத்தடியில் இருந்த ஒரு சிவலிங்கத்தின் மீது வீழ்ந்து கொண்டிருந்தன. அதிகாலையில் மரத்தை விட்டு இறங்கிய வேடன் முன் சிவகணம் ஒன்று தோன்றி வணங்கி நின்றது. "நீ யார், ஏன் என்னை வணங்குகின்றாய்?" என்று வேடன் ஒன்றுமே விளங்காமல் கேட்டான்.
"வேடரே நேற்று பகல் முழுவதும் உபவாசம் இருந்தீர். இன்று இரவு முழுவதும் கண் விழித்து வில்வ இலைகளை பிடுங்கி மரத்தடியில் இருந்த சிவலிங்கத்தைப் பூசித்தீர். நேற்று சிவராத்திரியானதால் நீ சிவராத்திரிப் பலனைப் பெறுகிறீர். என்னுடன் வாரும் கைலாயத்துக்குச் செல்லலாம்" எனக்கூறி வேடனை மரியாதையுடன் பூத கணம் அழைத்துச் சென்றது. தன்னை அறியாமலே சிவராத்திரி விரதமிருந்த வேடனுக்கே கைலாய வாசம் கிடைத்ததென்றால் சிவராத்திரியின் மகிமை உணர்ந்து, பக்தியுடன் சிவ வழிபாட்டினை செய்தால் அவர்களுக்கு என்னவெல்லாம் கிடைக்கும் என்பதை நினைத்து பாருங்கள்.
விஷ்ணு மற்றும் பிரம்மாவிற்கு ஏற்பட்ட தான் என்ற அகந்தையை அழித்து, ஜோதி வடிவமாக சிவன் காட்சி அளித்ததும், தன்னை வேண்டிய தேவர்களுக்கும் அன்னை பரசக்திக்கும் வேண்டிய வரங்களை சிவபெருமான் அருளியதும் இந்த மகா சிவராத்திரியில் தான் புராணங்கள் சொல்கின்றன. அதை விட பூஜைக்கு பயன்படாமல் போவாய் என சிவபெருமானிடம் சாபம் பெற்ற தாழம்பூவையும் கூட ஈசன் கருணையுடன் ஏற்று, அருள் செய்யும் அற்புத இரவும் இந்த மகா சிவராத்திரி தான்.

No comments:
Post a Comment