வைகாசி விசாகம் 2025: முருகப்பெருமானை வழிபட உகந்த நேரம், வழிபடும் முறை மற்றும் பலன்கள் - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, June 8, 2025

வைகாசி விசாகம் 2025: முருகப்பெருமானை வழிபட உகந்த நேரம், வழிபடும் முறை மற்றும் பலன்கள்

 வைகாசி விசாகம் 2025: முருகப்பெருமானை வழிபட உகந்த நேரம், வழிபடும் முறை மற்றும் பலன்கள்


முருகப் பெருமானை வழிபட்டு, அவரது அருளை பரிபூரணமாக பெறுவதற்குரிய மிகவும் சிறப்பு வாய்ந்த நாட்களில் ஒன்று வைகாசி விசாக திருநாள். வைகாசி மாதத்தில் விசாகம் நட்சத்திரமும், பெளர்ணமி திதியும் இணைந்து வரும் நாளை தான் வைகாசி விசாகமாக கொண்டாடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு வைகாசி விசாகம் ஒரு நாளும், அடுத்த நாள் பெளர்ணமி திதியும் வருகிறது.


 விசாகம் நட்சத்திரத்திலேயே முருகப் பெருமான் அவதரித்ததாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ளதால் விசாகம் நட்சத்திரம் வரும் நாளில் வைகாசி விசாகம் விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபட வேண்டும்.


இந்த ஆண்டு ஜூன் 09-ம் தேதி திங்கட்கிழமை வைகாசி விசாகம் வருகிறது. ஜூன் 08ம் தேதி பகல் 02.10 மணிக்கு துவங்கி, ஜூன் 09ம் தேதி மாலை 04.40 மணி வரை விசாகம் நட்சத்திரம் உள்ளது.


 ஜூன் 10ம் தேதி பகல் 12.26 மணிக்கு தான் பெளர்ணமி துவங்குகிறது. அதனால் வைகாசி விசாகம் விரதம் இருப்பவர்கள் ஜூன் 09 -ம் தேதியன்று விரதம் இருந்து, முருகப் பெருமானை வழிபடுவது சிறப்பு. பெளர்ணமி விரதம் இருப்பவர்கள் ஜூன் 10-ம் தேதி அல்லது 11- ம் தேதி விரதம் இருந்து வழிபடலாம்.


யாரெல்லாம் வைகாசி விசாகம் விரதம் இருக்கலாம்?


வைகாசி விசாகம் விரதத்தை யார் வேண்டுமானாலும் இருக்கலாம். இருந்தாலும் பல காலமாக தீராத பிரச்சனையில் இருக்கிறோம் என்பவர்கள், உதாரணத்திற்கு பல ஆண்டுகளாக திருமணத்திற்காக காத்திருக்கிறேன், திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என்பவர்கள், நீண்ட காலமாக தீராத துன்பத்தில் இருக்கிறேன் என்பவர்கள் வைகாசி விசாகத்தன்று முருகப் பெருமானின் அருளை பெற விரதம் இருக்கலாம். முருகப் பெருமானின் அருளை பெற்று விட்டால் பல காலமாக தீராமல் இருக்கும் துன்பம் கூட தூள் தூளாக நொருங்கி போய் விடும் என கந்தர் அனுபூதியில் அருணகிரிநாதரே பாடி உள்ளார்.


வைகாசி விசாகம் வழிபாடு செய்வதற்கான நேரம் :


காலை 6 மணி முதல் 07.20 மணி வரை


காலை 09.10 மணி முதல் 10.20 மணி வரை


மாலை 6 மணிக்கு பிறகு

வேலை நாள் என்பதால் காலையில் பூஜை செய்து வழிபட முடியாதவர்கள், மாலை 6 மணிக்கு மேல் வழிபடலாம்.


 ஆனால் மாலை 04.40 மணி வரை மட்டுமே விசாகம் நட்சத்திரம் இருப்பதால் காலையில் முருகப் பெருமானுக்கு பூஜை செய்து வழிபடுவது சிறப்பு.


வைகாசி விசாகம் வழிபாட்டு முறை :


வீட்டில் உள்ள முருகப் பெருமான் படத்தை சுத்தம் செய்து அழகிய மலர்களால் அலங்கரிக்க வேண்டும். வேல் அல்லது முருகப் பெருமான் விக்ரஹம் வைத்திருப்பவர்கள் அன்று பால் அபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு. வீட்டில் படம் மட்டும் வைத்திருப்பவர்கள் அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்கு அபிஷேகத்திற்கு பால் வாங்கிக் கொடுக்கலாம்.


 வீட்டில் முருகப் பெருமானுக்கு பால் நைவேத்தியமாகவும் படைக்கலாம். வீட்டில் விளக்கேற்றி வைத்து முருகப் பெருமானுக்கு சர்க்கரை பொங்கல், பாயசம் என ஏதாவது ஒரு இனிப்பு செய்து நைவேத்தியமாக படைத்து வழிபடலாம். எதுவும் செய்ய முடியாதவர்கள் 2 வாழைப்பழம், வெற்றிலை பாக்கு வைத்து மனதார வழிபடலாம். முருகனுக்குரிய எந்த பாடல், மந்திரம் தெரிகிறதோ அதை படித்து வழிபடலாம்.


 எதுவும் தெரியாதவர்கள், "ஓம் சரவண பவ" என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி வழிபடலாம்.


என்ன தானம் செய்யலாம் ?


வைகாசி விசாகம் அன்று யாராவது ஒருவருக்காவது அன்னதானம் செய்வது சிறப்பு. இது வெயில் காலத்தில் வரும் திருவிழா என்பதால் நீர் மோர், பானகம், விசிறி போன்ற குளிர்ச்சி தரக் கூடிய பொருட்களை வாங்கி தானமாக கொடுக்கலாம்.


 முருகனின் மனம் குளிர வேண்டும் என்பதற்காக தான் இந்த நாளில் பால் குடம், பால் காவடி எடுத்து வந்து பக்தர்கள் பலரும் முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். அதனால் முருகனை மனதார நினைத்து மற்றவர்களுக்கு குளிர்ச்சியான பொருட்களை எது தானம் செய்தாலும் முருகப் பெருமான் மனம் மகிழ்ந்து, அருள் தருவார் என்பது நம்பிக்கை.


வைகாசி விசாகம் வரலாறு


கோடை காலத்தின் நிறைவாகவும் வசந்த காலத்தின் துவக்கமாகவும் வருவது தான் வைகாசி மாதம். கோடை காலத்தின் வெப்பம் தணிந்து வசந்த காலம் துவங்குகிறதோ அதேபோல், நம்முடைய வாழ்வில் உள்ள அனைத்து விதமான இன்னல்கள், துன்பங்கள் எதுவாயினும் அனைத்தையும் நீக்கி வாழ்வில் குளுமையை தருவதே வைகாசி விசாகம் ஆகும். வைகாசி மாதத்தில் வரக்கூடிய விசாகம் நட்சத்திரம் அன்று முருகப்பெருமான் அவதரித்ததால் வைகாசி விசாகம் என்று கூறப்படுகிறது.


முருகப்பெருமான், வைகாசி மாதத்தில் வரக்கூடிய விசாகம் நட்சத்திரத்தில் பிறந்ததால் அவருக்கு விசாகன் என்று பெயர்.


விசாகன் – வி என்றால் பறவை என்றும், சாகன் என்றால் பயணம் என்றும் அர்த்தம். அதாவது மயில்மேல் பயணம் செய்பவன் முருகப்பெருமான். மேலும், விசாகன் என்றால் விசாலமான கண்களை உடையவன் என்று மற்றொரு அர்த்தமும் உள்ளது. அதாவது, அள்ளிக்கொடுப்பதில் வள்ளல். இதனால் முருகப்பெருமானை விசாகன் என்று அழைப்பார்கள்.


வைகாசி விசாகம் வரலாறு..


முருகன் பிறந்த நாள் வைகாசி விசாகம். விசாகம் நட்சத்திரம் ஆறு நட்சத்திரங்கள் ஒன்று கூடியது. இதனால் முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பது ஐதீகம். 


பராசரர் முனிவர் ஒருவர் இருந்தார். அந்த முனிவருக்கு ஆறு குழந்தைகள். இந்த ஆறு குழந்தைகளும் எப்போதும் துறுதுறுவென்று சேட்டை செய்து கொண்டிருக்கக் கூடியவர்கள். ஒரு நாள் அந்த ஆறு குழந்தைகளும் தண்ணீரில் விளையாடி கொண்டிருந்தார்கள். அப்போது, பராசரர் முனிவர் அங்கு வந்து தண்ணீரை விட்டு மேலே வாருங்கள் என அழைத்தார்.


ஆனால், அக்குழந்தைகள் யாரும் அவர் பேச்சினை கேட்காமல் தண்ணீரிலேயே விளையாடி கொண்டிருந்தார்கள். கோபமடைந்த முனிவர் அக்குழந்தைகளை பார்த்து சாபம் விட்டார். நீங்கள் நான் சொல்வதை கேட்காமல், தண்ணீரிலேயே இருக்கிறீர்கள். அதனால் நீங்கள் மீன்களாகவே மாறி விடுங்கள் என்று சாபம் விடுத்தார்.


மீன்களாக மாறிய அக்குழந்தைகள், எங்களுக்கு சாப விமோச்சனம் என்ன என்று கேட்டனர். அதற்கு முனிவர், அன்னை பார்வதியின் அமுத பாலினை முருகப்பெருமான் அருந்துருகிற போது, முருகன் திருவாயில் இருந்து என்றைக்கு ஒரு சொட்டு உங்கள் வாயில் விழுகிறதோ அன்றைக்கு தான் நீங்கள் மனிதர்களாக மாறுவீர்கள் என்று கூறினார்.


அன்னை பார்வதி தேதி, தன் அமுத பாலினை ஒரு பாத்திரத்தில் எடுத்து முருகப்பெருமானுக்கு தந்து கொண்டிருக்கும்போது, முருகப்பெருமான் வேண்டுமென்றே ஒரு சொட்டு பாலினை கீழே கொட்டினார்.


இதனை மீன்களாக இருக்கும் முனிவர்கள் அருந்தி தன் வாழ்வில் வசந்தத்தை பெற்றார்கள். இது நிகழ்ந்தது வைகாசி விசாகம் அன்று. ஆக வைகாசி விசாகம் அன்று நாம், நமக்கு என்ன விதமான இன்னல்கள் இருந்தாலும் முருகப்பெருமானை நினைத்து விரதம் இருந்து வழிபட்டால் நம் வாழ்க்கையிலும் வசந்தம் கிட்டும்.


வைகாசி விசாகம் நாளில் விரதம் இருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தால்   கிடைக்கும்  நன்மைகள் 


முருகப்பெருமானுக்கு எத்தனை விழாக்கள் எடுத்தாலும், வைகாசி விசாக விழா தான் வளர்ச்சியைக் கொடுக்கும் விழாவாக அமைகின்றது. விசாக நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை தரிசித்தால் நிச்சயம் வெற்றி கிட்டும்! விரும்பியது நடக்கும்! அதனால் தான் திருசெந்தூர் முதல் தேசமெங்கும் உள்ள முருகனின் திருத்தலங்களில் வைகாசி விசாக விழாவை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்கின்றார்கள்.


நினைத்தது நடக்க வேண்டும், நம்முடைய வேண்டுதல்களும், வழிபாடுகளும் இரு மடங்கு பலனை அள்ளி தர வேண்டும் என்றால் வைகாசி விசாக நாளில் விரதமிருந்து, முருகப் பெருமானை மனம் உருக வழிபட வேண்டும். அவருக்குரிய மந்திரங்கள், பதிகங்கள் முதலானவற்றை பாராயணம் செய்ய வேண்டும்.


மந்திரங்களும், பதிகங்களும் தெரியவில்லையே என்று மனம் வருந்த வேண்டாம். எளிமையாக 'ஓம்' என்ற பிரணவ மந்திரத்தையோ அல்லது முருகனுக்குரிய 'ஓம் சரவண பவ' என்ற ஆறெழுத்து மந்திரத்தையோ உச்சரித்தால் போதும். திருப்புகழ், கந்தசஷ்டி கவசம் படிக்கலாம். அனைத்து பலன்களும் உங்களை வந்து சேரும்.


விசாகத் திருநாளில் முருகனின் சன்னதிக்கு சென்று வழிபட்டால் வேண்டிய வரம் கிடைக்கும். திருத்தலத்திற்கு செல்ல முடியாதவர்கள் உங்கள் வீட்டு பூஜையறையில் முருகப்பெருமானின் படத்தை வைத்து அரளி, செம்பருத்தி முதலான மலர்களைக் கொண்டு அலங்கரிக்கலாம். சர்க்கரைப் பொங்கல் அல்லது எலுமிச்சை சாதம் நைவேத்தியமாக செய்து விளக்கேற்றி பிரார்த்தனை செய்யுங்கள். முடிந்தால், ஏழை, எளிய மக்களுக்கு எலுமிச்சை சாதம் வழங்குங்கள். குடை, செருப்பு, மோர், பானகம், தயிர் சாதம் முதலியவற்றை ஏழைகளுக்கு தானம் செய்தால் திருமண பேறு கிட்டும். குழந்தைபேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும். இந்த விரதம் இருப்பவர்களுக்கு ஆபத்துக்கள் அகலும். அனைத்து செல்வங்களும் கிடைக்கப் பெறும் என்பது நம்பிக்கை.


கடன் உள்ளிட்ட கவலைகளில் இருந்தும் வழக்கு உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்தும் நம்மை விடுவித்து அருளும் முருகனை


வைகாசி விசாக நட்சத்திர நாளில் வணங்கி வளம் பெறுவோம்.


வைகாசி விசாக வழிபாடு எவ்வாறு தலையெழுத்தை மாற்றும்?


வைகாசி விசாகத்தன்று முருகனை முழு மனதுடன் வழிபடுபவர்களுக்கு, அவருடைய அருள் பரிபூரணமாகக் கிடைக்கும் என்பது ஐதீகம். குறிப்பாக அறியாமல் செய்த பாவங்கள் நீங்கி, புண்ணியங்கள் சேரும். திருமணம், கல்வி, வேலைவாய்ப்பு போன்ற வாழ்வின் முக்கிய நிகழ்வுகளில் இருக்கும் தடைகள் நீங்கி, வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், இந்த நாளில் விரதம் இருந்து முருகனை வழிபட்டால், நிச்சயம் குழந்தை வரம் கிடைக்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.


எமதர்ம ராஜனும் இந்த விசாக நட்சத்திரத்தில் அவதரித்ததால், இந்த நாளில் முருகனை வழிபடுவது நீண்ட ஆயுளையும், நல்ல ஆரோக்கியத்தையும் தரும் என்று நம்பப்படுகிறது. முருகனின் ஞான சக்தி, பக்தர்களின் மனக் குழப்பங்களைப் போக்கி, தெளிவான சிந்தனையையும் மன அமைதியையும் அளிக்கும்.


சொல்ல வேண்டிய மந்திரங்கள் 


“ஓம் சரவண பவ”, “ஓம் சரவணபவாய நம” போன்ற முருகனுக்குரிய மந்திரங்களை நாள் முழுவதும் சொல்லிக் கொண்டே இருக்கலாம். வேல் மாறல், கந்த சஷ்டி கவசம், திருப்புகழ் போன்ற பக்திப் பாடல்களைப் பாராயணம் செய்யலாம்.


வைகாசி விசாகம் மந்திரம்:

விஸாகம் ஸர்வ பூதாநாம் ஸ்வாமிநம் க்ருத்திகா ஸுதம்!

ஸதா பாலம் ஜடாதாரம் ஸ்கந்தம் வந்தே ஸிவாத்மஜம்!!!


பொருள்: விசாக நட்சத்திரத்தில் அவதரித்தவரும், கார்த்திகை தேவிகளால் வளர்க்கப்பட்டவரும், எப்பொழுதும் குழந்தை வடிவமாக திகழ்பவரும், ஜடை தரித்தவரும், சிவபெருமானின் மகனுமான ஸ்கந்தனை வணங்குகிறேன். இந்த மந்திரத்தை 18 முறை மனதார உச்சரிக்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த மந்திரத்தை வைகாசி விசாகத்தன்று பூஜையில் 11 முறை சொல்லலாம்.


சக்தி வாய்ந்த முருகன் மந்திரம்:


ஓம் முருகா…

நமஸ்தே நமஸ்தே மகாசக்திபானே…

நமஸ்தே நமஸ்தே லசத்வஜ்ரபானே…

நமஸ்தே நமஸ்தே கடிங்ஞாஸ்தபானே…

நமஸ்தே நமஸ்தே சூடாவீஷ்டபானே…

ஓம் முருகா…

No comments:

Post a Comment