சித்ரா பௌர்ணமி 2025: சிறப்புகள், பலன்கள்,செய்ய வேண்டியவை மற்றும் தவிர்க்க வேண்டியவை..! - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, May 11, 2025

சித்ரா பௌர்ணமி 2025: சிறப்புகள், பலன்கள்,செய்ய வேண்டியவை மற்றும் தவிர்க்க வேண்டியவை..!

 சித்ரா பௌர்ணமி 2025: சிறப்புகள், பலன்கள்,செய்ய வேண்டியவை மற்றும் தவிர்க்க வேண்டியவை..!


பௌர்ணமிகளில் மிகவும் முக்கியமானது சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமி ஆகும். இதை சித்ரா பௌர்ணமியாக கொண்டாடுகிறோம். இந்த நாள் பாவங்களை போக்கி, புண்ணிய பலன்களை பெறுவதற்கான நாளாகும். இந்த எந்தெந்த விஷயங்களை கண்டிப்பாக செய்ய வேண்டும், எவற்றை எல்லாம் தவிர்க்க வேண்டும் என்ற விதிமுறைகளை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.


சித்ரா பவுர்ணமி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8.53 மணிக்கு தொடங்கி 12-ம் தேதி இன்று (திங்கட்கிழமை) இரவு 10.48 மணிக்கு நிறைவடைகிறது.


சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பௌர்ணமி நம்முடைய பாவங்களை போக்கிக் கொண்டு, அதன் மூலமாக துன்பங்கள் பலவற்றில் இருந்து விடுபடுவதற்கான மிக முக்கியமான நாளாகும். இந்த நாளில் பக்தி, தானம், மற்றும் மத சடங்குகள் செய்வது வழக்கம். இந்துக்களும், புத்த மதத்தினரும் இந்த நாளை கொண்டாடுகிறார்கள். இந்த நாளில் செய்யும் தானங்கள், வழிபாடுகள் கடவுளின் ஆசீர்வாதத்தை பன்மடங்கு அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.


இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி மே 12-ம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த புனித நாளில் சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். அப்போதுதான் பாவங்கள் செய்யாமல் இருக்க முடியும். மேலும், இந்த நாளின் ஆன்மீக பலன்களை அதிகரிக்க சில விஷயங்களை செய்ய வேண்டும். சிலவற்றை தவிர்க்க வேண்டும். அவை என்னவென்று பார்க்கலாம்.


சித்ரா பௌர்ணமியில் செய்ய வேண்டியவையும், தவிர்க்க வேண்டியவையும் :


பௌர்ணமி அன்று விஷ்ணுவை சத்யநாராயணராகவும், லட்சுமி தேவியையும் வணங்க வேண்டும். சந்திரனுக்கு அர்க்யம் கொடுக்க வேண்டும். அதாவது, தண்ணீர் ஊற்றி வணங்க வேண்டும். இந்த நாளில் தெய்வீக சக்திகள் அதிகமாக இருக்கும். அதனால் வாழ்க்கையில் நல்ல ஆற்றல் பெருகும்.


பௌர்ணமி அன்று கோயிலுக்கு சென்று வழிபடுவது, தானம் செய்வது, புனித நதிகளில் நீராடுவது நல்லது. இதனால் மகிழ்ச்சியும், வளமும் பெருகும்.


- தாமச உணவுகள், மது அருந்துதல், மற்றும் கடுமையான அல்லது தவறான வார்த்தைகளை பயன்படுத்துதல் போன்றவற்றை இந்த புனித நாளில் தவிர்க்க வேண்டும்.


- பௌர்ணமி அன்று தலைக்கு குளிப்பதோ, முடி வெட்டுவதோ கூடாது. புராணங்களின் படி, பௌர்ணமி அன்று முடி வெட்டினால் பணம் இழப்பு ஏற்படும். வீட்டில் வறுமை வரும். ஆண்கள், பெண்கள், திருமணமாகாத பெண்கள் என எல்லோரும் இதை தவிர்க்க வேண்டும்.


- சித்ரா பௌர்ணமி அன்று சிவ பெருமானையும், முருகப் பெருமானையும் வழிபடுவதுடன், சித்ரகுப்தரையும் வழிபட வேண்டும்.


- சித்திரா பௌர்ணமி இரவில், நிலவொளியில் தியானம் செய்தால் நோய்கள் நீங்கும். உடல் நலம் பெறும். இது ஒரு சக்திவாய்ந்த ஆன்மீக பயிற்சி.


- விஷ்ணுவுக்கு துளசி மிகவும் பிடித்தமானது. அதனால் பௌர்ணமி அன்று துளசி இலைகளை பறிக்க கூடாது. அது பாவம். அன்றைய நாளின் புனிதத்திற்கு எதிரானது.


- சித்ரகுப்தரின் உருவத்தை வரைந்து நாம் செய்த பாவங்களில் இருந்து விடுபட மன்னிப்பு கேட்டு, அவரை அருளை பெற வேண்டும்.


சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரம் இணைந்த நாளில் வரும் பவுர்ணமி தினம், புராண நிகழ்வுகளின் நினைவாக சிறப்பைப் பெறுகிறது. மற்ற பவுர்ணமிகளில் சிறு களங்கத்துடன் தோன்றும் சந்திரன், சித்ரா பவுர்ணமியன்று, பூரணக்கலைகளுடன் பூமிக்கு மிக அருகில் தோன்றும். சந்திரனும் சூரியனும் முழு நீசம் பெறும் இந்த நாளில், நாம் தெய்வங்களிடம் சரணடைந்து வழிபடுவது நன்மைகளைத் தரும் என்பது ஐதீகம்.


மனிதர்களின் பாவ புண்ணியங்களை எழுதி வைத்து அதற்கேற்றார்ப் போல், அவர்களின் இறப்பையும் அதன்பின் அவர்கள் வசிக்கப் போகும் சொர்க்கம்- நரகம் ஆகியவற்றை நிர்ணயிக்கும் பெரிய பொறுப்பில் உள்ள எம தர்மனின் உதவியாளரான சித்திரகுப்தனை வழிபடும் நாள்தான் இந்நாள். சித்ரகுப்தனின் பிறப்புக் குறித்து பல்வேறு புராண சம்பவங்கள் விவரிக்கப்பட்டாலும் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிகழ்வாக இக்கதையே பெரும்பாலும் உள்ளது.


கயிலாயத்தில் ஒருநாள் அன்னை பார்வதி தேவி, பொழுதுபோக்காக ஒரு அழகிய ஆண் குழந்தையின் வடிவத்தை சித்திரமாக வரைந்து மகிழ்ந்தாள். அதே நேரத்தில் எல்லாம் வல்ல ஈசனிடம், விதி முடிந்த மனிதரின் உயிரைப் பறித்து பூமி மாதாவின் பாரத்தைக் குறைக்கும் பணியில் உள்ள எமதர்மன், அதிக வேலைப்பளு காரணமாகத் தான் அவதிப்படுவதாகவும், தனக்கு ஏற்ற சிறந்த உதவியாளரைத் தரும்படியும் வேண்டினான்.


அப்போதுதான் ஈசனிடம் தான் வரைந்த ஓவியத்தைக் காட்டினாள் அன்னை உமாதேவி. அழகில் சிறந்த அந்த ஆண் குழந்தையின் ஓவியம், ஈசனின் மனதை மயக்கியது. அந்நேரம் எமனின் வேண்டுகோள் நினைவில் தோன்ற, அவ்வோவியத்தைக் கையில் எடுத்த இறைவன் தன் மூச்சுக் காற்றை அவ்வோவியத்தில் செலுத்த, ஓவியத்தில் இருந்த குழந்தை உயிர்பெற்று வந்தது. சிவசக்தியின் அம்சமாக உருவான அக்குழந்தை, சித்திரத்தில் இருந்து உயிர் பெற்றதால் 'சித்ர குப்தன்' எனப்பெயர் பெற்றது. ஈசனை வேண்டித் தவமிருந்து பல ஞானங்களைப் பெற்று வளர்ந்தது.


கல்வி கேள்விகளில் சிறந்தவனான சித்ரகுப்தனை தகுந்த வயதில் எமதர்மனிடம் அனுப்பி, மனிதர்களின் பாவப்புண்ணிய கணக்குகளை நெறி தவறாமல் எழுதி, எமனுக்கு உதவி செய்யும்படி பணித்தார் சிவபெருமான் என்கிறது புராணம். 'சித்' என்றால் 'மனம்' என்றும், 'குப்த' என்றால் 'மறைவு' என்றும் பொருள். மனிதர்களின் மனதில் மறைந்திருக்கும் பாவ எண்ணங்களையும், மனதார செய்யும் நல்ல செயல்களின் புண்ணியத்தையும் கவனித்து எழுதி வைக்கிறார் சித்ரகுப்தர் என்பது நம்பிக்கை.


மனிதரின் பாவ புண்ணியக் கணக்குகளை எழுதும் பணிக்காக இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட சித்திரகுப்தன், பிறக்கும்போதே கையில் எழுத்தாணி ஏடுடன் பிறந்ததாக ஐதீகம். நாம் செய்யும் புண்ணிய செயல்களையும் பாவ செயல்களையும் தவறாமல் நடுநிலையாக, அவரவரின் பூர்வ புண்ணியங்களின் படி ஆராய்ந்து மறையாத எழுத்துகளால் கணக்குப் புத்தகத்தில் எழுதுவதாக நம்பிக்கை. ஆகவேதான் அன்று சித்திரகுப்த பூஜையில் எழுத்தாணி மற்றும் கணக்கு நோட்டுப் புத்தகங்கள் வைத்து வாழ்வு வளம் பெற வேண்டுகின்றனர்.


சித்ரா பவுர்ணமியன்று பூஜையறையை சுத்தம் செய்து, சித்ரகுப்தன் படத்தை தெற்கு திசையில் வைத்து பூக்களால் அலங்கரிக்க வேண்டும். பின்னர் சந்தனப்பொட்டு வைத்து, பழங்கள், காய்கறிகள், வேப்பம்பூ பச்சடி, பச்சரிசி வெல்லத்துடன் இனிப்புகள் மற்றும் கலவை சாதங்களை நைவேத்தியமாகப் படைக்க வேண்டும். ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கு ஏற்றி மனதில் உள்ள தீய எண்ணங்களை விலக்கி நல்ல எண்ணங்களை புகுத்தி தீப தூபம் காட்டி சித்ரகுப்தனை மனதார வழிபட வேண்டும்.


சித்ரா பவுர்ணமியன்று களங்கமில்லாத முழுநிலவின் அழகைக் கண்டு ரசிக்க, கடற்கரை பூங்கா போன்ற இடங்களில் மக்கள் ஒன்று கூடுவார்கள். அவரவர் வீடுகளில் செய்த 'சித்ரா அன்னம்' எனப்படும் கலவை சாதங்களை எடுத்து வந்து, நிலாச்சோறு உண்ணும் வழக்கம் குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமையையும், அன்பையும் பெருக வைக்கும் என்பதால் நம் பெரியோர்கள் கடைப்பிடித்த நல்வழி இது. சித்ரா பவுர்ணமியின் சிறப்புகளாக பல ஆன்மிக வழிபாடுகளும், பூஜைகளும் ஆலயங்கள்தோறும் நடைபெற்று வருகின்றன.


குறிப்பாக மதுரையில் அன்று கள்ளழகர் ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு தரிசனம் தருவது ஆண்டுதோறும் நிகழும் சிறப்புமிக்க வைபவமாகிறது. கன்னியாகுமரியில் அன்றுமட்டும் ஒரே நேரத்தில் சூரியன் மறைவதையும் சந்திரன் தோன்றுவதையும் கண்டுமகிழலாம். திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் நிகழ்வு பிரசித்தி பெற்றதாக இருக்கிறது. இந்த தினத்தில் சித்ரகுப்தனை வேண்டி, வருட பலாபலன்களை அறிந்து கொள்ளும் பஞ்சாங்கம் படிப்பதும், கடல் நீரில் நீராடுவதும் வாழ்வில் சுபீட்சத்தை அருளும். அன்றைய தினம் சித்ராதேவிக்கு (அம்பிகை) தேங்காய் சாதம், புளியோதரை, எலுமிச்சை சாதம், தயிர்சாதம், பருப்புபொடி சாதம், கறிவேப்பிலைப்பொடி சாதம், மாங்காய் சாதம், வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், அரிசி உப்புமா, அவல் உப்புமா, கோதுமை உப்புமா ஆகியவைகளைப் படைத்து அவற்றை பசித்தோருக்கு தானமாகத் தந்து புண்ணியம் பெறலாம்.

No comments:

Post a Comment