சுவை மிகுந்த வெண்டைக்காய் மோர் குழம்பு செய்வது எப்படி?
தயிர் மற்றும் வெண்டைக்காய் சேர்த்து தயாரிக்கப்படும் மோர் குழம்பை எளிதாக 10 நிமிடங்களில் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
தயிர் - 1 கப்
வெண்டைக்காய் - 5
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
அரைக்க
தேவையானவை :
துருவிய தேங்காய் - 1/2 கப்
கடலை பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 2
பச்சைமிளகாய் - 3
இஞ்சி துண்டு - 1
சீரகம் - 1/2 டீஸ்பூன்
தாளிக்க தேவையானவை :
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை :
கடலை பருப்பை இரண்டு, மூன்று முறை நன்றாக அலசி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 20 நிமிடங்களுக்கு ஊறவைத்துக்கொள்ளுங்கள்.
பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி துண்டு, சீரகம், ஊறவைத்த கடலை பருப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக மைய அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
அடுத்து வாணலி ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிய துண்டுகளாக நறுக்கிய வெண்டைக்காயை போட்டு மிதமான தீயில் வதக்கவும்.
வெண்டைக்காய் நன்கு வதங்கி வரும்போது சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
பின்னர் கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு மற்றும் உளுத்தம்பருப்பு போட்டு கொள்ளவும்.
கடுகு வெடித்ததும் வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக்கொள்ளவும்.
பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள பொருட்களை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.
பிறகு அதனுடன் அடித்து வைத்துள்ள தயிர், சிறிதளவு உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளுங்கள்.
பின்னர் அதில் வதக்கிய வெண்டைக்காயை சேர்த்து கொதிக்கவிடாமல் இறக்கினால் சுவையான வெண்டைக்காய் மோர் குழம்பு தயார்.
No comments:
Post a Comment