ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் ஏலக்காயின் மருத்துவ பயன்கள்..!
இரவு உணவை உட்கொண்ட பிறகு ஒரு ஏலக்காயை மென்று சாப்பிடும் வழக்கத்தை தொடர்ந்து வந்தால் ஏராளமான நன்மைகளை பெறலாம். அவற்றுள் முக்கியமான சில நன்மைகள் பற்றி பார்க்கலாம்.
செரிமானத்திற்கு உதவும்
ஏலக்காய் செரிமான நொதிகளை தூண்டக்கூடியது. வயிறு வீக்கம், அசிடிட்டி மற்றும் வாயுத்தொல்லையை குறைக்கக்கூடியது. இரவு உணவு உட்கொண்ட பிறகு ஒரு ஏலக்காயை மென்று சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்தும். வயிற்று பிரச்சினைகளுக்கு சிறந்த இயற்கை தீர்வாகவும் அமையும்.
சுவாசத்தை புத்துணர்ச்சியாக்கும்
ஏலக்காயில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் வாய்வழி பாக்டீரியாவை எதிர்த்து போராடும். அதனால் வாய் துர்நாற்றத்தை போக்கி புத்துணர்ச்சியான சுவாசத்தை அளிக்கும். வாய் சுகாதாரத்தை பராமரிக்க செயற்கை புத்துணர்ச்சியூட்டும் பொருட்கள் அல்லது சூயிங்கம் உபயோகிப்பதற்கு இயற்கையான மாற்றாக ஏலக்காய் அமையும்.
தூக்கத்தை ஊக்குவிக்கும்
ஏலக்காயில் இருக்கும் சேர்மங்கள் நரம்புகளை தளர்த்த உதவும். மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்கும். தூக்க தரத்தை மேம்படுத்துவதற்கும், அமைதியான இரவிற்கும் பங்களிக்கும்.
நச்சுகளை வெளியேற்றும்
ஏலக்காயில் இருக்கும் டையூரிடிக் பண்புகள் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுகளை வெளியேற்றவும், சிறுநீரகங்களை சுத்தப்படுத்தவும் துணைபுரியும். கல்லீரல் செயல்பாட்டையும் ஊக்குவிக்கும்.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்த ஏலக்காய், உடலில் கொழுப்பு அளவை குறைப்பதன் மூலமும், ரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துவதன் மூலமும் ஒட்டுமொத்த இதய செயல்பாட்டை மேம்படுத்தும். இதய ஆரோக்கியத்திற்கும் பலம் சேர்க்கும்.

No comments:
Post a Comment